Tuesday, December 26, 2006

தடயம் - அத்தியாயம் - 3

"செல்வம், அதப் பாருங்க!"

அதைப் பார்த்த செல்வம், அதிர்ந்து போய் நின்றார்.

ஓரு பெரிய கத்தி ரத்தத்துடன் அந்த மூலையில் கிடந்தது.

"சார் அந்த கத்தி இவ்வளவு நேரம் இங்க இல்லை! திடீர்னு இங்க எப்படி வந்தது? ஒரே மர்மமா இருக்கு!" என்றார்.

"அந்த ஜன்னல் கதவு கொஞ்சம் திறந்து இருக்கு பாருங்க"

செல்வம் அந்த ஜன்னலைத் திறக்கப் போனார்.

"அதைத் தொடாதீங்க அதுல கைரேகை இருக்க சான்ஸ் இருக்கு. மொதல்ல நான் சொன்ன விஷயங்களை கவனிங்க. ஃபோரன்ஸிக் லேப்க்கு ஃபோன் பண்ணி, அருள்மொழியை கான்டாக்ட் பண்ணி அவரால இங்க வரமுடியுமான்னு கேளுங்க. நான் வீட்டுக்குப் பின்பக்கம் போறேன், என்னை அங்க வந்து பாருங்க" என்றபடி அவர் பின் பக்க கதவை தன் கர்சீஃபால் தள்ளி திறந்து கொண்டு சென்றார்.

சந்தானம் குறிப்பிட்ட அருள்மொழி, தடவியல் துறையில் ஒரு சாதாரண உதவியாளராக 20 வருடங்களுக்கு முன்பு சேர்ந்தவர் தன் தனித் திறமையால் இன்று மிக அத்துறையின் இயக்குனராக இருக்கிறார். அவருடைய ஃபோட்டோகிராஃப்பிக் மெமரி, மற்றும் எதையும் சற்று வித்தியாசமாக பார்க்கத் தெரிந்த கலை அவரை சந்தானத்துக்கு மிக நெருங்கியவராக்கியது. அருள்மொழியின் திறமையால் முடிவுக்கு வரமுடியாத பல கேஸ்களை காவல்துறை சுலபமாக தீர்த்து வைத்திருக்கிறது. அருள்மொழி யாருக்காகவும் தன் குறிப்புகளை மாற்றி எழுத மாட்டார். அவருக்கு சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை. இது செலவத்துக்கும் தெரியும். செல்வத்துக்கு இப்போது சந்தானத்தின் மீது முழு நம்பிக்கை வந்தது.

செல்வம் தன் செல்ஃபோனை எடுத்து ஃபோரன்ஸிக் லேபுக்கு பேசினார், அருள்மொழி இல்லை என்றதும் அவரை செல்ஃபோனில் பிடித்து நடந்ததைச் சொல்லி அவரை வரமுடியுமா என சந்தானம் கேட்டதைச் சொன்னார். அதற்கு அவர், "சந்தானம், என்னை தனிப்பட்டு வரச் சொல்றார்னா இது முக்கியமான கேஸாதான் இருக்கும். நான் ஒரு 15 நிமிஷத்தில அங்க வந்திடறேன். எதையும் கலைக்காம பார்த்துக்கங்க. மறுபடி அந்த அட்ரஸை சொல்லுங்க" என்று கேட்டுக் கொண்டார்.

பிறகு செல்வம் ஃபோட்டோகிராபருக்கு ஃபோன் செய்து தேவராஜின் வீட்டிற்கு வரச்சொன்னார். ஒரு கான்ஸ்டபிள கூப்பிட்டு, "பாலன், வேன்ல இருக்கர ரெண்டு பேரையும், நம்ம ஸ்டேஷனுக்கு கொண்டு போங்க ரைட்டர் வரதன் வந்திருப்பார் அவர்கிட்ட இவங்கள இந்த கேஸ்ல சஸ்பெக்ட்டா ட்ரீட் பண்ணி லாக்கப்ல வெக்க சொல்லிட்டு நீங்க சீக்கிரமா வாங்க".

"சரி சார்"

"வெளில இருக்கர கான்ஸ்டபிள்ஸ்ல 2 பேரை அக்கம் பக்கத்துல சந்தேகப் படற மாதிரி யார் இருந்தாலும் விசாரிக்கச் சொல்லுங்க, ரெண்டு பேரை வாசல்ல காவலுக்கு வெச்சுட்டு, நீங்க ட்ரைவர் சாமிகண்ணுவ கூட்டிகிட்டு போங்க"

"சரிங்க சார்"
செல்வமும், சந்தானத்தை போலவே பின் பக்க கதவை தன் கர்சீஃபால் தள்ளி திறந்து கொண்டு சென்றார். அங்கு சந்தானம் திறந்து இருந்த ஜன்னலின் அருகில் குனிந்து எதையோ பார்த்துக் கொண்டு இருந்தார்.
"ஐயா, தடவியல் நிபுணருக்கும், புகைப்படம் எடுப்பவருக்கும் சொல்லியிருக்கிறேன். உங்களுக்கு ஏதும் தடயம் கிடைத்ததா?"
"செல்வம் என்ன ஆச்சு? ஏன் திடீர்னு சுத்தத் தமிழ்ல பேசரீங்க?"
"ஒன்னும் இல்லை, இந்த கதைல ரொம்ப ஆங்கிலம் கலந்து இருக்குன்னு புகார் வந்திருக்காம், சுத்தத் தமிழ்ல பேசச் சொல்லி கதாசிரியர் சொன்னார், சரின்னு முயற்சி பண்ணினேன், ஆனா எனக்கே என்ன சொல்றேன்னு புரியல"
"இந்த கொலை கேசுல கொஞ்சம் கூட நாம இன்னும் கண்டு பிடிக்கல நீங்க என்னடான்னா விளையாட்டா பேசிட்டிருக்கீங்க, கொஞ்சம் தீவிரமா யோசிப்போமா?"
"சாரி சார், ஃபோரன்ஸிக் லேபுக்கும், ஃபோட்டோ கிராஃப்பருக்கும் சொல்லிட்டேன். நீங்க என்ன கண்டுபிடிச்சீங்க?"
"இங்க இருந்துதான் அந்த கத்தியை உள்ள போட்டிருக்காங்க, ஜன்னலுக்கு பக்கமா ஒருத்தர் நின்ன ஷூ மார்க் இருக்கு, ஜன்னல்ல பிரிண்ட்ஸ் இருக்கலாம், கைக்கு க்ளவுஸ் போட்டிருந்தா ப்ரிண்ட்ஸ் இருக்காது, இப்படி கொலை பண்ற கும்பல் க்ளவுஸ் போட்டுட்டு வர சான்ஸ் ரொம்ப கம்மி. கத்தில இருக்கர ப்ளட் செத்து கிடக்கர பைக் குமார்தான்னு சரி பார்க்கனும்".
"இப்ப வந்திடுவாங்க வந்ததும் சொல்லிடறேன்".
"அக்கம் பக்கத்தில விசாரிச்சீங்களா?"
"இல்லை"
"பரவாயில்லை, நானே விசாரிக்கறேன், நீங்க கூட வாங்க".
அப்போது ஒரு கான்ஸ்டபிள் வந்து "சார், ஃபோரன்ஸிக் லேப்ல இருந்து வந்திருக்காங்க, ஒரு போட்டோகிராப்பரும் வந்திருக்கார்"
"உடனே உள்ளே அனுப்புங்க" கான்ஸ்டபிள் வேகமாக வாசல்புறம் நோக்கி ஓடுகிறார்.
செல்வமும், சந்தானமும் பின்புற வழியாக வீட்டினுள் வருகின்றனர்.
அருள்மொழியைப் பார்த்தவுடன் சந்தானம், "வாங்க அருள்மொழி, எப்படி இருக்கீங்க".
"நல்லா இருக்கேன். பார்த்து ஒரு 2 மாசம் ஆச்சுல்ல! Let me take a look around and we will talk later".
ஒரு 15 நிமிடங்களுக்குப் பிறகு அவர் சந்தானத்தின் பக்கம் வந்து, "இது கேன்ங் ஸ்டைல் கொலை மாதிரி இருக்கு. அதே சமயம் இதைச் செய்தவங்க ரொம்ப புத்திசாலிங்க, ஒரு ஆளா செய்த மாதிரி தெரியலை, கண்டிப்பா ஒரு 4-5 பேர் இதை சேர்ந்து செய்திருப்பாங்கன்னு நினைக்கிறேன். என் அசிஸ்டெண்ட்ஸ் ப்ரிண்ட்ஸ் எடுத்திட்டிருக்காங்க, நிறைய ப்ரிண்ட்ஸ் இருக்கு, எல்லாத்தையும் லிஃப்ட் பண்ண சொல்லியிருக்கேன். நீங்க ஏதாவது தடயம் எடுத்தீங்களா?"
"அந்த பின்பக்க ஜன்னல் வழியா ஒரு கத்தியை யாரோ போட்டிருக்காங்க, ஜன்னல்ல ப்ரிண்ட்ஸ் இருக்கலாம், ஜன்னல் பின் பக்கம் ஒரு ஷு மார்க் இருக்கு அதையும் கொஞ்சம் பாருங்க. "
"அதையும் லிஃப்ட் பண்ணிடச் சொல்றேன். நான் நிறைய கண்டு பிடிச்சுருக்கேன், அதுக்கு முன்னாடி அந்தப் படங்கள்ல இருக்கரது யாரு?"
"அது தேவராஜ், இந்த வீட்டு ஓனர், ஏன்"
"அவர் எங்க இப்ப?"
"தெரியலை அதை கண்டுபிடிக்க முயற்சிகள் நடக்குது. "
"இங்க நடந்திருக்கரத வெச்சு பார்த்தா, அவரோட உயிருக்கு ஆபத்து, சீக்கிரம் கண்டு பிடிக்கனும்" என்ற அவருடைய கணிப்பைக் கேட்ட செல்வமும், சந்தானமும் உறைந்து நின்றனர்.
(தொடரும்)

Saturday, December 16, 2006

தடயம் - அத்தியாயம் - 2

சந்தானம் செல்வம் பக்கம் திரும்பி, "செல்வம், இது தேவராஜ் இல்லை, இது வேறயாரோ, தேவராஜ் எங்க?" என்றார்.
"சார், இது தேவராஜ் இல்லைங்கரது எனக்குத் தெரியும், உங்களுக்கு யார், என்ன தகவல் கொடுத்து நீங்க இங்க வந்தீங்க?"
சந்தானம் சற்று தயங்கி விட்டு, "அப்பரம் சொல்றேன், முதல்ல உங்களோட அடுத்த மூவ் என்ன?"
"சாரி சார், நீங்க என் ஜூரிஸ்டிக்ஷ்ன் இல்லை, இப்ப யுனிஃபார்ம்லயும் இல்லை இத வெச்சு பார்க்கும் போது நீங்க அஃபிஷியலா இங்க வரலைன்னு நான் முடிவு பண்ணிக்கலாமா?"
சந்தானத்துக்கு கோபம் தலைக்கேறியது, "நான்சென்ஸ், நான் யுனிஃபார்ம்-ல இல்லாத வெச்சு எங்கிட்ட எதையும் மறைக்காதீங்க, நான் உங்க ஜூரிஸ்டிக்ஷ்ன் இல்லைதான், ஆனா as a Commissioner of Police, I have every right to ask an SI about the progress of a murder case he is investigating, do you understand that", என்ற அவருடைய பேச்சிலும், தோரணையிலும் மிடுக்கும், செல்வம், இரண்டு வருடம் முன்பு அவரிடம் பணியாற்றிய போது இருந்த முனைப்பும் தெளிவாகத் தெரிந்தது.
உடனே செல்வம், "சாரி சார், நீங்க இங்க திடீர்னு வந்து நீங்க தேவராஜோட தாய்மாமன்னு சொன்னதும் நீங்க தேவராஜுக்கு உதவி செய்யதான் வந்திருக்கீங்கன்னு நினைச்சேன், உங்களுக்கு இந்த வீட்டில கொலை செய்யப்பட்டு கிடக்கரது அவர் இல்லைங்கர விஷயமே தெரியலைன்னதும், எதுக்கும் உங்களோட இன்டென்ஷன் என்னன்னு தெரிஞ்சுக்கலாம்னு ட்ரை பண்ணினேன். But, as a SI, I know my limits and I have every right to suspect anyone on a murder case even if that person is my senior officer."
சந்தானம் சற்று நிதானமாகி, "I appreciate your sincerity and dedication to your duty. உங்களுடைய நெக்ஸ்ட் மூவ் என்ன சொல்லுங்க?"
"சொல்றேன் சார் அதுக்கு முன்னால நீங்க எதை வெச்சு இங்க வந்தீங்க, உங்களுக்கு யார் தகவல் கொடுத்தாங்க?"
"எனக்கு ஒரு 4 மணி நேரம் முன்னாடி ஒரு ஃபோன் வந்தது, பேசினவங்க தேவராஜ யாரோ கொலை பண்ணிட்டாங்க இங்க ஒரே களேபரமா இருக்குன்னு சொன்னாங்க, நான் அதனால உடனே கிளம்பி வந்தேன்."
"ஃபோன் பண்ணினது ஆணா? பெண்ணா?"
"ஆண்தான்"
"உங்க செல்லுக்கு ஃபோன் பண்ணினாங்களா இல்லை வீட்டுக்கு பண்ணினாங்களா?"
"வீட்டுக்குத்தான்"
"அவங்க எத்தனை மணிக்கு ஃபோன் பண்ணினாங்க"
"ராத்திரி ஒரு 1 - 1:30 மணி இருக்கும்"
"ஆச்சர்யமா இருக்கு சார், எங்களுக்கு ஃபோன் வந்ததே ஒரு 1 மணி நேரம் முன்னாடிதான், அதுவும் இந்த வீட்டுல ஏதோ ப்ராப்ளம், களேபரமா இருக்குன்னு எதிர் வீட்லருந்து பஞ்சாபகேசன்கரவர் ஃபோன் பண்ணினார். உங்களுக்கு 7 மணி நேரம் முன்னாடியே ஃபோன் வந்துடுச்சுன்னா இதுல ஏதோ மர்மம் இருக்கு, பட் நோ ப்ராப்ளம், உங்க வீட்டுக்கு வந்த call-ஐ trace பண்ணிடலாம்"
"அதுக்கு அவசியம் இல்லை, என் வீட்டுல Caller Id facility இருக்கு, அதனால அந்த நம்பரை வாங்கித் தரேன், நீங்க நேரா அட்ரஸையே ட்ரேஸ் பண்ணிடலாம்."
சந்தானம் தன் செல் ஃபோனை எடுத்து வீட்டிற்கு கால் செய்து பேசினார், பேசும் போது ஒரு சிறிய பேப்பரை எடுத்து எதையோ எழுதினார், பிறகு, "செல்வம் இது தான் அந்த நம்பர் ட்ரேஸ் பண்ணிடுங்க. இப்ப சொல்லுங்க உங்க நெக்ஸ்ட் மூவ் என்ன?"
"சார், தேவராஜ தேடிகிட்டு இருக்கோம், மாணிக்கத்த விசாரிச்சா ஏதாவது க்ளூ கிடைக்கும்னு நினைக்கிறேன். இங்க நடந்திருக்கரத பாக்கரப்ப, தேவராஜ் இந்த ஆள கொலை பண்ணிட்டு ஓடிப் போயிருக்கலாம். சூழ்நிலை அப்படித்தான் இருக்கு".
"செல்வம், தேவராஜ் என்னோட ரிலேடிவ்தான், ஆனா உங்களுக்கு நல்லாத் தெரியும் எனக்கும் டியூடிதான் முக்கியம், அவன் இந்த கொலையை செய்து இருந்தா அவனை சட்டத்து முன் கொண்டு வந்து கண்டிப்பா நான் தண்டனை வாங்கித்தருவேன். ஆனா, அதே சமயம் இந்த நிமிஷம் இங்க செத்து கிடக்கரது தேவராஜ் இல்லைங்கரதும் ரொம்ப சந்தோஷமா இருக்கு. நீங்க முதல்ல இவன் யாரு, என்னன்னு விசாரிங்க".
"சார் இவன் ராயபுரம் ரௌடி பாஸ்கரோட வலது கை, பேரு பைக் குமார்".
"இவனா பைக் குமார்!, இவன் மேல 4 கொலைக் கேசு இருக்கே! இவன் எப்படி இங்க வந்தான், இவனுக்கும் தேவராஜுக்கும் என்ன கனெக்ஷன்?"
"அத விசாரிச்சுகிட்டு இருக்கோம்"
"செல்வம், நான் இந்த கேஸ்ல நேரடியா இறங்கலாம்னு நினைக்கறேன். உங்களுக்கு அதனால ஒன்னும் கோபம் வராதே?".
"ஏன், என் இன்வெஸ்டிகேஷன் மேல நம்பிக்கை இல்லையா?"
"அப்படி இல்லை, நான் நேரடியா இறங்கினா, தேவராஜ ஒருவேளை இந்த கொலையைப் பண்ணிட்டு தலை மறைவா இருந்தா, அவன் எப்படி யோசிப்பான்னு, எங்க போவான்னு என்னால கணிக்க முடியும்."
செல்வம், ஒரு புன் சிரிப்புடன், "நீங்க எதுக்கும் என் அதிகாரி துணைக் கமிஷ்னர் துரைராஜன் கிட்ட பேசிடுங்க"
"துரை எதுக்கு, நான் ஐ.ஜி. தேவசகாயத்துக்கிட்டயே பேசிடறேன்" என்ற சந்தானம் தன் செல் ஃபோனில் யாருக்கோ கால் செய்து பேசத் துவங்கினார், பேசிவிட்டு, "செல்வம், I.G. கிட்ட பேசிட்டேன், இந்த கேஸுக்கு என்னை ஸ்பெஷலா அப்பாயிண்ட் பண்ணி ஆர்டரை, உங்க கமிஷ்னர் துரைராஜனுக்கு அனுப்ப ஏற்பாடு பண்ணிட்டார், இனி இந்த கேஸ்ல நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒர்க் பண்ணப் போறோம்."
அப்போது செல்வத்துக்கு அவருடைய செல்ஃபோனில் ஒரு கால் வந்தது, அதைப் பார்த்து விட்டு, "கமிஷ்னர் துரைராஜன் வீட்ல இருந்து கால்" என்று சொல்லிவிட்டு கொஞ்சம் தள்ளிப் போய் பேசினார்.
"சார், கமிஷ்னர், நீங்க சொன்னதைத்தான் சொன்னார், அவருக்கு நம்ப மூவ்மெண்ட்ஸ் பத்திய தகவல்களைஅடிக்கடி தெரியப் படுத்தச் சொன்னார். இப்ப நீங்க சொல்லுங்க அடுத்து என்ன பண்ணலாம்னு"
"மாணிக்கத்தையும், அவரோட பையனையும் சந்தேகக் கேஸ்ல புக் பண்ணி ஸ்டேஷன்ல வைங்க, அப்ரம் அவங்கள விசாரிக்கலாம், உள்ள இருக்கர பாடிய ஃபோட்டோ எடுக்கரதுக்கு ஏற்பாடு பண்ணுங்க, ஃபாரன்ஸிக் ஆளுங்கள வரச் சொல்லுங்க, பாடிய போஸ்ட்மார்டம் பண்ண ஏற்பாடு பண்ணுங்க, அக்கம் பக்கத்துல சந்தேகப் படற மாதிரி யார் இருந்தாலும் புடிச்சு உள்ள போடுங்க, எதிர் வீடு, பக்கத்து வீடுன்னு வீடு வீடா போய் விசாரணை பண்ண ஏற்பாடு பண்ணுங்க ", என சர சரவென உத்தரவு போட்டுவிட்டு திரும்பியவர் கண்ணில் அது பட்டது.
"செல்வம், அதப் பாருங்க!"
அதைப் பார்த்த செல்வம், அதிர்ந்து போய் நின்றார்.

(தொடரும்)

Tuesday, December 05, 2006

தடயம் அத்தியாயம்-1

போலீஸ் கமிஷ்னர் சந்தானத்தின் கார் உமையாள் தெருவில் திரும்பும் போது அவருக்கு இன்று ஒரு சோதனையான நாள் என்று தோன்றியது.

அவர் போக வேண்டிய வீட்டின் முன் கூட்டம் கட்டுக்கடங்காமல் சேர்ந்து இருந்தது. போலீஸ் கூட்டத்தை விரட்டிக் கொண்டு இருந்தனர். யாரும் கேட்பதாக இல்லை. எல்லோர் முகத்திலும் நடப்பது என்ன என்று தெரிந்து கொள்ளும் ஆவலும், பரபரப்பும் சேர்ந்து இருந்தது.
கார் நின்றதும் ட்ரைவர் வந்து கதவைத் திறப்பதற்குள் அவரே திறந்து கொண்டு இறங்கினார். அவரைப் பார்த்ததும் அங்கிருந்த 2 கான்ஸ்டபிள்கள் கூட்டத்தை திட்டி அகற்றினர். அவர் அருகில் வந்ததும் விறைப்பாக சல்யூட் செய்தனர். அதை அவர் தலையசைத்து ஏற்றுக்கொண்டார். அப்போது S.I. செல்வம் ஒடி வந்து ஒரு சல்யூட் செய்து மரியாதையாக சற்று தள்ளி நின்று கொண்டார்.
"என்ன செல்வம் எப்படி இருக்கீங்க? பார்த்து 4-5 மாசமாச்சே!. வீட்டில நல்லா இருக்காங்களா?"
"நல்லா இருக்கேன் சார். நீங்க எப்படி இங்க....!" என்று கொஞ்சம் தயக்கமாக இழுத்தார்.
"நான் தேவராஜோட தாய் மாமன்."
செல்வம் அதிர்ந்து போய் "அப்படியா!, I am very sorry Sir" என்றார்.
"It's okay, காலைல news கிடைச்சதும் உடனே வந்தேன். இதுவரைக்கும் என்ன கண்டுபிடிச்சீங்க, யாரையெல்லாம் சந்தேகப் படரீங்க?"
"சார், நிறைய கண்டுபிடிச்சிருக்கோம், உங்க கிட்ட சொல்றதுக்கு கொஞ்சம் வருத்தமாதான் இருக்கு, இங்க யாருக்கும் தேவராஜப்பத்தி அவ்வளவா நல்ல opinion இஇல்லை, முன் கோபி, சண்டைக்கார ஆசாமி இப்படி நிறைய தெரிஞ்சுது. நேத்திக்கு கூட பக்கத்தில இருக்கர மாணிக்கம்னு ஒருத்தர் கிட்ட சண்டை போட்டு அது அடிதடியாகி, மாணிக்கத்துக்கு ஆஸ்பிட்டலில் ட்ரீட்மெண்ட் கொடுக்கரது வரை போயிருக்கு. "
"மாணிக்கம்னா சொன்னீங்க? அவர் சொந்த ஊர் எது? அவர் கூட யார் யார் இருக்காங்கன்னு விசாரிங்க?"
"விசாரிச்சுட்டேன், மாணிக்கம் தங்கவேலு அவரோட முழு பேர். அவருடைய சொந்த ஊர் திருநெல்வேலி டிஸ்ட்ரிக்ட்-ல திருக்குருக்குடி இது கலக்காடுக்கு பக்கம். இங்க அவர், அவருடைய மனைவி சாந்தம்மாள், ஒரு மகன் ஆறுமுகம், ஒரு மகள் வேலம்மாள் இருக்காங்க."
S.I சொன்னதை உன்னிப்பாகக் கேட்ட சந்தானம், "சரி உள்ளே போகலாமா?" என்றவர் சற்று நின்று, "செல்வம், ஒரு நிமிஷம், அந்த மாணிக்கம் இருக்கர இடம் தெரியுமா?"
"தெரியும் சார்"
"அவரை கூட்டிகிட்டு வரச்சொல்லுங்க"
"சார், நான் அவரையும் அவர் மகனையும் ஏற்கனவே, விசாரணைக்காக கொண்டு வந்து நம்ம வேன்-ல உட்கார வெச்சு இருக்கேன். நீங்க வந்திருக்கரத பார்த்ததும், அவங்கள விசாரிக்க இருந்தத நிறுத்தி வெச்சுட்டு உங்ககிட்ட பேச வந்தேன்."
"வெரி குட், நல்லா ரியாக்ட் பண்ணிருக்கீங்க, வாங்க உள்ள போகலாம்"
"கண்டிப்பா". அங்கிருக்கும் ஒரு கான்ஸ்டபிளை கூப்பிட்டு "301 நாங்க வெளில வர வரைக்கும் யாரையும் உள்ளே விடாதே"
"சரிங்க"
சந்தானம் இந்த வீட்டிற்கு ஒரே ஒருமுறை வந்திருக்கிறார். அது 2 வருடங்களுக்கு முன்னால். அப்போதைக்கும் இப்போதைக்கும் வீட்டில் எந்த மாற்றமும் இல்லை. அதே சுத்தம், அதே ஒழுங்கு தெரிந்தது.
அது ஒரு சிறிய வீடு, உள்ளே நுழைந்ததும் ஒரு சிறிய வெராண்டா அதைத் தொடர்ந்து ஒரு ஹால், ஹாலில் தேவராஜின் பல படங்கள் அழகாக ஃப்ரேம் செய்து மாட்டப்பட்டிருந்தது.
"இத்தனைஅழகான சிரிப்பு, இவனைப் போய்..." என்றபடி சந்தானம் பல் கடித்தார். அதை செல்வத்தின் கூரிய கண்கள் கவனித்து நோட் செய்து கொண்டது.
தேவராஜிடம் முன் கோபத்தைத் தவிர எந்த கெட்ட பழக்கமும் இல்லை. சந்தானத்தின் அக்கா மரகதமும் அவளுடைய கணவன் சுதர்சனமும் 4 வருடங்களுக்கு முன் ஒரு கார் ஆக்ஸிடெண்டில் இறந்த போது அவனுக்கு பணத்துக்கு குறையில்லாமல் சேர்த்து வைத்திருந்தார்கள். சந்தானம் எவ்வளவோ சொல்லியும் அவரோடு தங்காமல், கோட்டை மாதிரி இருந்த தன் வீட்டை விட்டுட்டு இந்த வீட்டை வாங்கி, தனியாக இருந்தான். சந்தானமும், தனிமை அவனுக்கு கொஞ்சம் நிம்மதி தரும் என்று விட்டு விட்டார். அது இப்போது இப்படி முடிந்து இருக்கிறது.
சந்தானம் ஹாலின் இடது பக்கத்தில் இருந்த கதவைத் திறந்தார். அது ஒரு சிறிய படுக்கை அறை. படுக்கையில் யாரும் படுத்த அடையாளம் இல்லை. அதன் இடப்புறம் அட்டாச்டு பாத்ரூம், தரையெல்லாம் ஈரமாக இருந்தது.
சந்தானம் திரும்பி செல்வத்தைப் பார்த்தார். "அங்க ஹீட்டர் தண்ணீ திறந்து விட்டு இருந்தது, அது பக்கெட்டிலிருந்து வழிந்து நாங்க வரும் போது பாத்ரூம் ஃபுல்லா தண்ணியாயிருந்தது. நல்ல வேளை இந்த வீட்டு தண்ணி டேங்க்-ல தண்ணி இருந்தது இல்லைனா பெரிய ஆக்ஸிடெண்டாயிருக்கும்." என்றார்.
சந்தானம் பெட்ரூமின் வலப்புறம் இருந்த சமையல் அறைக்கு போனார். சமையல் அறையிலிருந்து தீய்ந்த வாசனை வந்தது. Exhaust fan ஓடிக்கொண்டிருந்தது. ரெண்டு பாத்திரங்கள் அடிப்பிடித்து கருகிப் போயிருந்தது.
சந்தானம் பிறகு ஹாலின் பின் புறக் கதவைத் திறந்தார், அங்கு ஒரு சிறிய ஸ்டோர் ரூம் கோடியில் ஜன்னல் ஓரம் ஒரு வாஷ் பேசின் அதில் நிறைய ரத்தக் கறை. வாஷ் பேசினுக்குப் பக்கத்தில் சுவரில் யாரோ யாரையோ மோதி ரத்தம் வந்து அது ஒரு கோடாக கீழே இறங்கி தரையைத் தொட முடியாமல் நின்று போயிருந்தது. அந்த ரூமின் நடுவில் மேலே செங்குத்தாகப் பார்த்தபடி அவன் கிடந்தான். அவன் உடம்பில் கண்டிப்பாக உயிர் இல்லை. கழுத்தில் ஒரு வெட்டு, கைகளில் நிறைய ரத்தக் கறை, வயிற்றில் 2-3 கத்திக்குத்து வாங்கி, ஒரு பெரிய ரத்தக் குளத்தில் கிடந்தான். உடல் சற்று வெளிர் நிறமாகி இருந்தது. வாய் பிளந்து காற்றுக்காக ஏங்கியது போலக் கிடந்தான், கைகளில் நிறைய வெட்டு காயங்கள். நல்ல முரடனுக்குரிய தோற்றம், உடல் நல்ல கட்டு மஸ்தாக இருந்தது.
அவனைப் பார்த்ததும் சந்தானத்துக்கு ஒரு நிமிடம் இருதயத்துடிப்பு நின்றுவிடும் போல இருந்தது. செல்வம் பக்கம் திரும்பி, "செல்வம், இது தேவராஜ் இல்லை, இது வேறயாரோ, தேவராஜ் எங்க?" என்றார்.

-தொடரும்


-முரளி

Monday, December 04, 2006

அரங்கேற்றம்

அவங்க ஐந்து பேரும் அந்த கட்டிடத்தை வந்து அடைந்த போது அவங்களுக்கு முன்பே பலர் வந்து சேர்ந்திருப்பது அங்கு நிறுத்தி வைக்கப் பட்ட கார்களைப் பார்த்து தெரிந்தது.

அவர்களுள் முதலில் நடந்து சென்றவர் நடுத்தர வயது, நல்ல வாட்ட சாட்டமாக, ஆஜானுபாகுவாக இருந்தார். நிமிர்ந்த நடை, நேர் கொண்ட பார்வை, நல்ல பொன்னை ஒத்த நிறம், கரிய விழிகள், அடர்ந்த கேசம். அவரை தொடர்ந்தது அவருடைய மனைவி. யாராவது முதல் தடவையா பார்த்தால் பார்த்த மாத்திரத்திலேயே அம்மான்னு அவங்க கால்ல விழக்கூடிய ஒரு கருணை அவங்க முகத்தில கொட்டி கிடந்தது. சற்று குண்டா ஒரு இளைஞன், அவனுடைய கண்களே அவன் மிக மிக அறிவாளி என்று சொல்லும்படி களையாக இருந்தான். அவனோடு அவனுடைய தம்பி போல ஒரு சிறுவன், துருதுரு என அலை பாயும் கண்களோடு என்ன விஷமம் செய்யலாம் என அலைபவன் போல கொள்ளை அழகோடு வந்தான். இவங்க நாலு பேரையும் தொடர்ந்து சற்று தள்ளி அவங்க உதவியாளர் போல ஒருத்தர் வந்தார். அவருக்கும் நடுத்தர வயது, அவருடைய திரட்சியான மார்பும், வலுவான கைகளும், கால்களும் அவர் அவர்களின் பாதுகாப்பாளர் என்பதை சொல்லாமலே தெரிந்தது.
அந்த கட்டிடத்தின் வாயிலில் சற்றுத் தயங்கி அவர்கள் நின்றார்கள். அப்போது சிறுவன் "அப்பா, இந்த இடம்தானா" என்றான்.
"இந்த இடம்தான், அதோ அங்க அவங்க தயாராயிட்டு இருக்காங்க, இப்போ நிகழ்ச்சி ஆரம்பிச்சுடும், வாங்க உள்ளே போகலாம்"
அப்போது பாதுகாப்பாளர், "ஐயா, நானும் உள்ளே வரலாமா?"
"ஏன் என்ன தயக்கம், கண்டிப்பாக வரலாம்"
"இல்லை அழைப்பு உங்களுக்கு மட்டும்தான் அதனால் கேட்டேன்."
"நல்ல வேடிக்கை, நீ இல்லாமல் நான் என் குடும்பத்துடன் எங்கயாவது போனதுண்டா, எப்போ இப்படி பேச கத்துக்கிட்ட?"
"மன்னிச்சிடுங்க, நீங்கள் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கனும்னு உற்சாகமாக வந்தீங்க, அதை நான் கேள்வி கேட்டு கெடுத்துட்டேன்."
அப்போது இளைஞன், "அப்பா, உள்ள போய் நிகழ்ச்சியைப் பார்க்கலாமா அல்லது, இங்கேயே பேசிண்டு இருக்கலாமா என்பதை சீக்கிரம் முடிவு பண்ணுங்க" என்றான்.

அப்போது, பெரியவர் பாதுகாப்பாளர் பக்கம் திரும்பி ஒரு சிறிய புன்முறுவல் செய்தார், அதன் அர்த்தம் தெரிந்த பாதுகாப்பாளர் ஓடிச் சென்று இரட்டைக் கண்ணாடிக் கதவுகளைத் திறந்து அவர்களை அழைத்துச் சென்றார்.

அவர்கள் உள்ளே நுழைந்ததும் அவர்கள் கண்ணில் பட்டது கம்பீரமான நடராஜர் சிலை. அதைப் பார்த்ததும், பெரியவரும் அவர் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
அப்போது அவருடைய சிறிய மகன் "அப்பா, நாம கொஞ்சம் உட்காரலாமா" என்றான்.

அதற்கு அவனுடைய அம்மா, "இருப்பா, அப்பா சொல்லுவார் அப்பரம் உட்காரலாம்" என்றார்.

"கொஞ்சம் இருப்பா, அவங்க இப்போ என்கிட்ட ஆசீர்வாதம் வாங்க வருவாங்க அதுக்கு அப்பரம் நாம உட்காரலாம்" என்றார் அப்பா.

அவர் சொல்லி முடித்த போது, ரெண்டு சிறுமிகள் மேடையில் தோன்றினார்கள்.

"போனவருடம் இவங்க அரங்கேற்றம் பாக்கத்தானே நாம இங்க வந்தோம்!" என்றார் அந்த அம்மா.

அதற்கு அந்தப் பெரியவர் ஆம் என தலையசைத்தார்.

அந்த ரெண்டு சிறுமிகளும் மைக் முன்னாடி வந்து பேசத் துவங்கினார்கள்.

அப்போது பாதுகாப்பாளர், "ஐயா இவங்களா! நீங்க சொன்ன அந்த ரெண்டு பேர்"

"மலர்கள் பேசும் போது இடைஞ்சல் செய்யாதே" என்றார் அம்மா.
இல்லை என தலையசைத்தார் அந்தப் பெரியவர்.

தெளிவாக அவர்கள் பேசத் துவங்கினார்கள்.

"திருமதி. உமா செட்டி அவர்களுடைய மாணவிகளாக்கிய மீனா வீரப்பன் மற்றும் ப்ரீதி பாடில் இருவருக்கும் நடக்கும் இந்த நடன அரங்கேற்றத்திற்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம்......."


"தத்தோம் தகதோம், தத்தீத் ......" கணீரென ஜதியின் சப்தம் அந்த அரங்கத்தை நிரப்பியது. அந்த ஐந்து பேரும் கண்மூடி மௌனமாக நின்றனர்.

சுழன்று சுழன்று ஆடியபடி மீனாவும், ப்ரீதியும், மேடையின் நடுவில் வந்து பிறகு, நடராஜர் சிலையை நோக்கி ஆடத்துவங்கினர். இருவரும் ஒருவித மயக்கத்தில் இருப்பது போல இருந்தது, அது ஒரு தவ நிலை என்பது அந்த ஐந்து பேருக்கும் புரிந்தது. கலையுடன் அவர்கள் உணர்வு ஒன்றாமல் இந்த நிலை வராது என்பது தெளிவாகத் தெரிந்தது.

மீனாவும், ப்ரீதியும் நடராஜர் சிலைக்கு மாலை அணிவித்து அவருடைய ஆசீர்வாதத்தை வேண்டி நின்ற போது, பெரியவர் புன்சிரிப்புடன் தன் மனைவியைப் பார்த்தார்.

"என்ன அவங்களுக்கு ஆசீர்வாதம் செய்யலையா"

"தேவி, இவருடைய ஆசீர்வாதம் இல்லாமல் இவர்களால் இன்று இந்த நிகழ்ச்சிக்கு தயாராகியிருக்க முடியுமா?" என்றார் பாதுகாப்பாளர்.

"நந்தியம்பதி, நம் குழந்தைகளை நாம் ஆசீர்வதிக்காமல் வேறு யார் ஆசீர்வதிப்பது"

"சரியாகச் சொன்னாய் தேவி, நாம் அனைவருமே அவர்களை ஆசீர்வதிப்போம்" என்ற பரமன் கண்மூடி ஓம் என ஜெபித்து தன் வலக்கையை தூக்கி ஆசீர்வதித்தார். தேவியும், இளைஞன் விநாயகனும், சிறுவன் கந்தனும், பாதுகாப்பாளர் நந்தி தேவரும் ஆசீர்வதித்தனர்.

மீனாவுக்கும், ப்ரீதிக்கும் ஒரு கண நேரம் சில்லென்ற ஒரு உணர்வு உடல் முழுதும் பரவி பளிச்சென்று விலகியது. உடலில் இருந்து அத்தனை சொர்வும், வலியும், களைப்பும், மனதில் இருந்த தயக்கம் எல்லாம் பட்டென்று விலகியது போல இருந்தது. பளிச்சென்று இருவரும் சிரித்த படி நடனமாடத் துவங்கினர்.

முருகனின் லீலைகளைச் சொல்லி நடனமாடியபோது, பரமன் முருகனைப் பார்த்து, "என்னப்பா, வள்ளியுடன் வந்திருக்கலாம் எனத் தோன்றுகிறதா" என்றார்.

"நான் இன்று உங்களுடன் இங்கு வரப்போவது தெரிந்தவுடன் அவளும், தெய்வயானையும் நமக்கு முன்பே வந்து நடனத்தை ரசித்துக் கொண்டிருக்கின்றனர்" என்றார் கந்தன். "

"அதுதானே பார்த்தேன் வா என்று சொன்னதும் நீ ஒன்றும் சொல்லாமல் என்னுடன் வந்ததின் காரணம் என்னவாக இருக்கும் என்று"

"தந்தையே, என்ன இது விளையாட்டு, உங்களுக்குத் தெரியாமல் இந்த உலகில் ஏதும் நடக்குமா?"

"அப்பாவும் மகனும் பரஸ்பரம் பாராட்டிக் கொள்வது இருக்கட்டும் நாட்டியத்தை கவனியுங்கள்" என்றார் தேவி.

சிறிது நேரம் கழித்து பலர் மேடைக்கு வந்து மீனாவையும், ப்ரீதியையும் பாராட்டி பேசினார்கள், பரமன் புன்சிரிப்புடன் அதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

விநாயகன் பரமனைப் பார்த்து, "தந்தையே, எல்லா அரங்கேற்றத்திற்கும் சென்று அனைத்து கலைஞர்களையும் ஆசீர்வதிக்கின்றீர்கள், உங்கள் எண்ணம் என்ன?"

"விநாயகா, இந்த உலகில் தருமம் தழைக்க, பகை, துவேஷம் அழிய, போர் முற்றிலும் நிற்க ஒரே வழி கலை வளர்வதுதான். கலையில் தன்னை அர்ப்பணித்த எவருக்கும், உலகில் எதையும் வெறுக்கவும் தெரியாது, அழிக்கவும் முடியாது. கலை ஒருவரை பண்படுத்தும், பலப்படுத்தும், அன்பைப் பெருக்கும்"

"தெரியும் தந்தையே, இதை நீங்கள் கூறக் கேட்பதில் எனக்கு ஒரு ஆனந்தம், அவ்வளவுதான்."

அப்போது நந்தியம்பதி, "பெரும, மேடையில் பலர் அந்த இரு பெண்மணிகளையும் பாராட்டிப் பேசியபோது நீங்கள் எதற்காகச் சிரித்தீர்கள்"

"அது வேறொன்றும் இல்லை, அவர்களைப் பாராட்டிப் பேசியவர்கள் இந்த அரங்கேற்றத்துடன் இவர்களது கடின உழைப்பு முடிந்து விட்டது போல பேசினார்களே அதை நினைத்து சிரித்தேன். இந்த அரங்கேற்றம் ஒரு துவக்கம்தான், இவர்கள் இத்தனை வருடங்கள் பெற்ற பயிற்சியின் பலன் இந்த அரங்கேற்றம் இல்லை, இந்தப் பயிற்சியின் பலன் இவர்களைப் போன்ற ஆயிரக்கணக்கான பேருக்கு இவர்கள் இந்தக் கலையை கற்பித்து இந்தக் கலையை வளர்ப்பதுதான். "

"அவர்களுக்கு துவக்கத்தில் என்ன ஆசீர்வாதம் செய்தீர்கள்"

"நந்தி உன் கேள்விகளுக்கு முடிவே இல்லையா? நான் அவர்களுக்கு ஆசீர்வாதமாக, இந்தக் கலையை பலருக்கு கற்பித்து, வளர்க்க அவர்கள் மனதில் ஒரு விதையை தூவி விட்டிருக்கிறேன்"

மங்களம் பாடி முடித்து மீனாவும், ப்ரீதியும் அனைவரையும் வணங்கி நிற்க, பரமன் மீண்டும் ஒருமுறை தன் வலக்கையை தூக்கி ஆசீர்வதித்து விட்டு ஒரு புன்முறுவலுடன் அனைவருடன் மறைந்தார்.

- முரளி.

Sunday, October 29, 2006

கம்பன் கவி இன்பம்

ரிச்மண்ட் தமிழ் சங்க ப்ளாக்கில் நண்பர் (நடராஜமூர்த்தி) உயிருள்ள சொற்றொடர்கள் எழுதி இறை மாட்சியை விளக்குகிறார், மற்றொருவர் (பித்தன் - யாருப்பா இவரு?) கிறுக்கல்கள் மூலம் சமுதாயக் குறைபாடுகளைச் சாடுகிறார், அடுத்து (பரதேசி - என்னைப் போன்ற பலரும் அமெரிக்காவிற்குப் பரதேசிகள்தான்) வாழ்கையைச் சற்று கனவுகளோடு பார்கிறார். என் பங்கிற்கு, நடராஜமூர்த்தி எழுதுவதற்குள் கம்பனின் கவித்திறமை பற்றி எழுதிவிட்டால், நான்தான் இந்த முயற்சியில் முதல் என்று கொஞ்சம் 'படம்' காட்டலாம் என்கின்ற முயற்சியே இது. எனவே குறையிருப்பின் பொருத்தருள்க.

கம்பர் மிகச் சிறந்த படைப்பாளி என்பது உலகம் அறிந்த உண்மை. கம்பர் எழுதிய ராமாயணத்தை கம்ப சித்திரம் என்றும், கம்ப சூத்திரம் என்றும், கம்ப நாடகம் என்றும் பலவாறு போற்றுவர் தமிழ் இலக்கியதை நன்கு கற்றவர்.

கம்ப சித்திரம் - ஒரு காட்சி எப்படி இருக்கிறது, அதில் கதாபாத்திரங்கள் எப்படி இருகின்றார்கள் என்பதை சொல்லால் புனைந்து நம் கண் முன் காட்சியாக வடித்து தருவதால் அது கம்ப சித்திரம்.

கம்ப சூத்திரம் - ஒரு உணர்வை அல்லது செயலை அல்லது குணத்தை ஆயிரம் பாடல்களில் விளக்கலாம், அதை ஒரே ஒரு வரியில் விளக்கலாம் என்று காட்டியவர் கம்பர். உதாரணத்திற்கு அரக்கர் என்பவர் யார் என்னும் கேள்விக்கு, அவர்கள் பற்கள் பெரிதாக இருக்கும், கைகள் முறங்கள் போல இருக்கும், நகங்கள் கூராகவும் அழுக்காகவும் இருக்கும், உடல் கரியதாகவும் பெரியதாகவும் இருக்கும், கண்கள் சிவப்பாக இருக்கும், நடந்தால் பூமி அதிரும், அனைவரும் அஞ்சும் தோற்றமும், செயலும் இருக்கும், என்றும் நாம் கூற முற்படுவோம். கம்பன் ஒரே வரியில் எவருக்கு இரக்கம் இல்லையோ அவர் அரக்கர் என்கிறார்.

அரக்கர் பாவமும் அல்லவர் இயற்றிய அறமும்
துரக்க நல்லருள் துறந்தனள் தூமொழி மடமான்
இரக்கம் இன்மைன் றோஇன்றுஇவ் வுலகங்கள் இராமன்
பரக்கும் தொல்பொருள் அமுதினைப் பருகுதின் றதுவே.
பொருள்
அரக்கர்கள் செய்த தீவினையும், தேவர்களும் முனிவர்களும் செய்த நல்வினையும், ஏவுதலால், இயற்கையாகத் தன்னிடம் இருக்கும் அருள் தன்மையை விட்டவளும் தூய்மையான நல்ல சொற்களைப் பேசும் மான்போன்ற கைகேயியின் இடத்து இரக்க உணர்வு நீங்கிய காரணத்தினால்தான் இன்றும் இந்த உலகத்தவர் இராமபிரானது பரவிய புகழாகிய அமிழ்தத்தினைப் பருக முடிகின்றது என உணர்த்துவதால் அது கம்ப சூத்திரம்.

கம்ப நாடகம் - ஒரு நாடகத்தை காணும் போது அதில் நடிப்பவர்கள், அவர்கள் பேச வேண்டிய வசனங்கள், அவர்கள் நிற்க/நடக்க வேண்டிய இடங்கள், அவர்களது நடை, உடை, பாவனைகளை எப்படி அந்த நாடகத்தின் சூத்திரதாரியான ஒரு இயக்குனர் வெளிப்படுத்துவாரோ அதை கம்பர் வெளிப்படுத்துவது தனிஅழகு.
கன்னி மாடத்தில் சீதா பிராட்டியாரை, விசுவாமித்ர முனிவர், இராமன் மற்றும் இளைய பெருமாள் மிதிலையில் முதன்முதல் காணும் காட்சியை கம்பர் இப் பாடல் மூலம் வருணிக்கிறார்.

பொன்னின் சோதி போதினில் நாற்றம் பொலிவேபோல்
தென்உண் தேனின் தீஞ்சுவை செஞ்சொற் கவியின்பம்
கன்னிம் மாடத்து உம்பரின் மாடே களிபேடோடு
அன்னம் மாடு முன்றுறை கண்டாங்கு அயல் நின்றார்
பொருள்
கன்னி மாடத்தின் மேல் பகுதியில் பொன்னின் ஒளியும், பூவின் நறுமணமும் ஒன்று சேர்ந்து பொலிவதைப் போன்றும், வண்டு விரும்பி உண்ணும் தேனின் சுவை போன்றும், செம்மை விளங்கும் சொற்களாலாகிய கவிதையின் இனிமை போன்றும், களிப்பு மிகுந்த பெண் அன்னம் போன்ற தோழியர்களோடு அரச அன்னம் வீற்றிருக்கும் எழிலைப் போன்று சீதாப் பிராட்டியார் அம் முற்றத்தில் (இதை இக்காலத்தில் பால்கனி என அழைப்பர்) வீற்றிருக்க இம்மூவரும் கண்டார்கள்.

இதைப் படிக்கின்றபோது நம் மனதில் ஒரு கேள்வி எழும். ஒரு கதையின் நாயகன், தன் நாயகியை முதன் முதல் காணும் போது, அவள் ஒர் உயர்ந்த இடத்தில் இருந்தும், தான் ஒரு தாழ்வான பகுதியில் இருந்தும் காண விரும்பமாட்டான், அதை கம்பரும் மாற்றிப் பாடியிருக்க முடியும், இப்படி அவர் பாடியதன் கருத்தை வள்ளுவர் 'வாழ்க்கைத் துணைநலம்' என்ற அதிகாரத்தில் இவ்வாறு விளக்குகிறார்.
புகழ் புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.

எவன் ஒருவன் தன்னை இகழ்பவர்கள் முன் ஒரு எருதின் தன்மையதாய், தலை நிமிர்ந்து நடக்கும் தகுதியில்லாதவனோ அவனுக்கு வாய்த மனைவியின் குணம் சரியில்லை என்று இடித்து கூறுகிறார். இராமன் சீதையை மிதிலையில் காணும் பொழுது திருமணம் ஆகாத ஒரு இளைஞன் ஆகவே அவன் தலை குனிந்து நடக்க வேண்டியிராதவன். சீதை, கற்பின் மொத்த உருவம், அவள் தலை நிமிர்ந்து பிற ஆடவரை நோக்கும் தன்மையில்லாதவள், அவள் தலை கவிழ்ந்து இருந்தவாரே, கீழே தலை நிமிர்ந்து நடக்கும் இராமனைக் காண முடிந்தது, இராமனால் காணப்படவும் முடிந்தது. இதனால் கம்பராமாயணம் கம்ப நாடகம் எனவும் போற்றப்படுகிறது.

இவ்வாறு, தன் புலமையை கொண்டு கவிச்சக்ரவர்த்தி எனப் பெரும் பெயர் பெற்ற கம்பர், ஒரிடத்தில் சீதையின் அழகை வருணிக்க தன்னிடத்தில் வார்த்தைகள் இல்லை என இராமாயணத்திலேயே வாக்குமூலம் தருகிறார். இது நமக்கெல்லாம் வியப்பான ஒரு செய்தி. ஒரு கட்டுரையை வடிக்கும் ஆசிரியர், கட்டுரையின் முகப்பில், இந்த கட்டுரையை வடிக்கும் திறமை தன்னிடத்தில் இல்லை என்றால், அதை எவர் படிக்கக் கூடும். ஒரு சொற்பொழிவாளர், கொடுக்கப் பட்டத் தலைப்பில் பேச தனக்குத் திறமை இல்லை என்று கூறினால், அவருடைய சொற்பொழிவை யார் கேட்பர், ஆனால், ஒரு காவியத்தைப் பாடும் கம்பர், காவியத்தலைவின் அழகை வருணிக்க தன்னிடத்தில் வார்த்தைகள் இல்லை என்பதை அந்த காவியத்திலேயே சொன்ன பிறகும் நாம் அதைப் படித்து இன்புறுகிறோம் என்றால், அந்த கருத்தைச் சொன்ன கம்பனின் கவி அழகுதான்.
அந்தப் பாடல்:
செப்பும் காலைச் செங்கமலத்தோன் முதல்யாரும்
ஒப்பெண் பாலும் கொண்டு உவமிப்போரும் உவமிக்கும்
அப்பெண் தானே ஆயின போதுஇங்கு
அயல் வேறோர்
ஒப்பு எங்கே கொண் டெவ்வகை நாடி உரை செய்வோம்
?


பொருள்:
சிறந்த தாமரை மலரில் வாழும் பிரமதேவன் முதல், சாதாரண மனிதர் வரையில் எவரும், ஒப்பாக எண்ணத் தகுந்த பகுதிகளையெல்லம் ஆராய்ந்து உவமிப்பவர்கள் உவமையாகச் சொல்லும் திருமகள் தானே இங்கு வந்திருப்பதால், அத்திருமகளை விட வேறு ஒரு உவமைப் பொருளை நான் எவ்விடம் தேடி உரைக்க முடியும்? எனக் கேட்கின்றார்.

இதை சற்று ஆராய்ந்து பார்த்தால் நம் இன்றைய நடைமுறை வாழ்க்கை முறையிலிருந்தே அறிந்து கொள்ளலாம். தன் மகனுக்கு ஏற்ற மணப்பெண்ணைத் தேடும் எல்லா தாயும், தன் மகனுக்கு மஹாலட்சுமி போல ஒரு பெண் தேடுவதாகச் சொல்லுவாள், ஆனால் அவளுக்கு மஹாலட்சுமியே மருமகளாக வந்தால் அவள் என்ன சொல்ல முடியும், அது போல, வேறு ஒரு பெண்ணாக இருந்தாள், நான் இந்த சீதை அழகில் மஹாலட்சுமி போல எனக் கூறலாம், இவள்தான் உலகத்தோர் அனைவரும் ஒப்பு நோக்கும் மஹாலட்சுமி என்கிற போது, நான் எவ்விதம் இவளுக்கு ஒப்புமை கூற முடியும் என்ற கம்பரின் கவி மிக இனிது.

கடைசியாக இந்த பகுதியை நிறைவு செய்ய ஒரு மங்களகரமான பாடல்.
எண்ணரு நலத்தினாள் இனையள் நின்றுழிக்
கண்ணொடு கண்ணிணை கவ்வி ஒன்றையொன்று
உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்.
பொருள்
பிறரால் எண்ணுவதற்கும் அரிய நலன்களைச் செய்பவளாகிய சீதாப் பிராட்டி கன்னிமாடத்தில் நின்று கொண்டு இருக்கையில் இருவர் கண்களும் ஒன்றையொன்று உணர்வினால் கவ்வி ஒருவரையொருவர் ஈர்க்க ஒருங்கிணைந்து விளங்க, அண்ணலாகிய இராமனும் நோக்கினான். சீதாப் பிராட்டியும் நோக்கினாள்.
இந்தப்பாடலை பல பேர் பல இடங்களில் விளக்கியுள்ளார்கள். 'பார்த்தல் வேறு, நோக்குதல் வேறு' என்பது பற்றியும், 'அண்ணலும்' என்று எழுதிப் பிறகு 'அவளும்' என்று எழுதியிருகிறார், அதன் காரணத்தை விளக்கியுள்ள பல கட்டுரைகளை நாம் படித்து இருப்போம். ஆயின், நான் வியந்து பார்க்கும் ஒரு பகுதி 'உணர்வும் ஒன்றிட'. தலைவன் தலைவி இருவரும் ஒருவரை ஒருவர் முதன் முதல் பார்கின்றபோது இருக்கும் எல்லா எண்ணங்களையும் விவரித்த கம்பர், உணர்வும் ஒன்றிட என்ற சொற்றொடர்மூலம் வாழ்வில் எது முக்கியம் என்பதை தெள்ளத்தெளிவாக விளக்குகிறார். இன்றைக்குத் திருமணமாகி 10, 15, 20 வருடங்கள் இல்வாழ்கை வாழ்ந்த பிறகும், அத்திருமணங்கள் முறிவதற்குக் காரணம் எது என ஆராய்ந்தால், நாம் கண்டு கொள்ளும் ஒர் உண்மை நம் மனங்கள் ஒன்றாததுதான். இராமனும், சீதாபிராட்டியும் ஒருவரை ஒருவர் பார்க்கின்ற அந்த கணத்திலேயே அவர்கள் இருவருடைய 'உணர்வும்' ஒன்றிவிட்டதாகச் சொன்ன் கம்பனின் கவி மிக மிக இனிது.
-முரளி

மனிதாபிமானம்

"அடுத்தது",

கணீரென ஒலித்தக் குரல் கூடியிருந்த அனைவரின் சப்தத்தையும் நிறுத்தியது.
அப்போது, இருவர் அவனை கொண்டு வந்து நிறுத்தினர். குழுமியிருந்த அனைவர் பார்வையும் அவன் மேல்தான்.
அவன் கண்களில் ஒளியில்லை, முகத்தில் அடர்ந்த தாடி, தலை எண்ணெயைக் கண்டு குறைந்தது 2 வருடமாவது இருக்கும், உலகில் உள்ள அழுக்கெல்லாம் அவன் மீதுதான் என்று சொல்லும் அளவிற்கு அழுக்காக இருந்தான், உடம்பில் உள்ள எலும்புகளை எக்ஸ்-ரே இல்லாமலேயே எண்ணிவிடலாம் என்ற அளவிற்கு ஒல்லியாக இருந்தான். கையில் ஒரு நசுங்கின, அழுக்கான ஒர் அலுமினிய தட்டு வைத்து இருந்தான், அதில் கொஞ்சம் காசு இருந்தது. தோளில் ஒர் பழைய துணி மூட்டை இருந்தது, அவனுடைய துணிகளும் மிகவும் அழுக்காக இருந்தது, ஒரு பழைய கிழிந்த சட்டையும், கறையேறிய வேட்டியும் அணிந்து இருந்தான்.
அவனைப்பார்த்த கூட்டம் ஸ்தம்பித்து போனது. யாருக்கும் பேசக்கூட தோன்றவில்லை. அவர்கள் பார்த்துக் கொண்டு இருப்பது ஒரு 6 அடி உயர வண்ண ஓவியம் என்பது கூட அவர்களுக்கு மறந்து போனது. அந்த ஓவியத்தில் லயித்து அவனுடைய தட்டில் போட, சிலர் தன்னிச்சையாக தங்கள் சட்டைப் பைக்குள் கைவிட்டு பணத்தை எடுத்தனர். அப்போது அந்த ஓவியக் கல்லூரியின் தலைவரும், நிருவனருமான கலாதர் மைக் அருகில் வந்து தெளிவான ஆங்கிலத்தில் பேசத்துவங்கினார்.
"இனிய கலா ரசிகர்களே, நீங்கள் ஏலம் கேட்க இருக்கும் இந்த பிச்சைக்காரனின் படத்தையும் இது போன்ற மேலும், 3 ஓவியத்தையும் நான் வெறும் விற்பனைக்காக வரையவில்லை. நீங்கள் இந்த ஓவியப் பள்ளிக்கு பக்கத்து சந்தில் இவனைப்பார்த்து இருப்பீர்கள். இவனைப்போல பலர் அங்கு இருக்கின்றார்கள். இந்த ஓவியக் கல்லூரிக்கு வரும் பலர், இவனையும், இவன் கூட இருக்கும் மற்ற பிச்சைக்காரர்களையும் இங்கிருந்து அப்புறப் படுத்த வேண்டினர். இவர்களை அடித்து விரட்டுவது ஒரு காட்டுமிறாண்டித்தனம் என்பது என்னுடைய தாழ்மையான் கருத்து. அதை விடுத்து இவனுக்கும், இவனைப்போன்ற பலருக்கும் ஒரு புது வாழ்க்கைக்கு வழி செய்யுமாறு ஒரு தொண்டு நிறுவனத்திடம் பேசினேன், அவர்களும் இதை ஒப்புக் கொண்டனர். அவர்களுக்கு இதனால் ஏற்படும் செலவை ஈடு கட்டவே இந்த ஓவியங்களை வரைந்து ஏலத்தில் விற்கிறேன். எனவே, இது ஒரு நல்ல காரியத்திற்கு என்பதை கருத்தில் கொண்டு தாராளமாக ஏலம் கேளுங்கள். அந்தத் தொண்டு நிறுவனத்தின் தலைமைப் பொருப்பாளர் திரு. மோகன் இங்கு வந்துள்ளார், இன்று ஏலம் முடிந்ததும், அந்தப் பணம் அவாரிடம் தரப்படும்.”
“முதல் படம் துவக்க மதிப்பு ரூ.5000/-“
அப்போது, கூட்டத்தில் ஒருவர், எழுந்து, “ரூ. 10,000” என்றார், மற்றொருவர் “ரூ.20,000” என்றார். 5 நிமிடத்தில் அது 2 லட்சமாகிவிட்டது.
கலாதர் முகத்தில் சந்தோஷம் கொப்பளித்தது. கூடியிருந்தவர்களின் அன்பின் மிகுதியால் அவருக்கு அதிகம் பேசவும் தோன்றவில்லை. அனைவரையும் பார்த்து "2 லட்சம் ஒரு தரம், இரண்டு தரம், மூன்று தரம்" என்று கூறி முதல் படத்தின் ஏலத்தை முடித்தார்.
இதை அடுத்து மேலும் 3 படங்களை கலாதாரின் உதவியாளர்கள் கொண்டுவந்து மேடையில் வைத்தனர். எல்லாம், முதல் படத்தைப் போலவே மிக அற்புதமாக இருந்தது. எல்லாப் படங்களும் முதல் படத்தைப் போலவே நிமிடத்தில் விற்று தீர்ந்தது.
பிறகு கலாதர், தழுதழுத்த குரலில் " உங்கள் அனைவருக்கும் எப்படி நன்றி சொல்வது என்று தொ¢யவில்லை. ஒரு நல்ல காரியத்திற்கு என்றவுடன் இப்படி தாராளமாக ஏலம் கேட்டு இந்த நாட்டில் மனிதாபிமானம் இன்னும் சாகவில்லை என்பதை உணர்த்தியுள்ளீர்கள், உங்கள் அனைவருக்கும், நீண்ட ஆயுளையும், நல்ல வசதியையும், எப்போதும் இது போன்ற நல்ல எண்ணத்தையும் ஆண்டவன் தரட்டும்" என்று பொங்கி வந்த கண்ணீரைத் துடைத்த படி கூறினார்.
பிறகு பள்ளியின் மற்ற ஓவியர்களின் ஓவியங்கள் விற்பனைக்கு வந்தது. ஓர் உதவியாளர் ஒவ்வொரு ஓவியமாக கொண்டு வந்து மேடையில் வைக்க, மற்றோர் உதவியாளர் அதன் விலையை கூறினார். அவற்றில் பல நல்ல விலைக்கு விற்கப்பட்டது, சில சாதாரண விலைக்கு விற்கப்பட்டது.
ஏலம் முடிவுக்கு வந்ததும், அவரவர்கள் ஏலம் எடுத்த படத்தை பணத்தைச் செலுத்தி வாங்கிக் கொண்டனர்.
பிறகு கலாதர் மேடைக்கு வந்து “4 படங்களின் ஏலத்தின் மூலம் கிடைத்த 7 லட்சத்திற்கான காசோலையையும், இந்த கல்லூரியின் சார்பில் ரூ.25,000/-க்கான காசோலையையும் திரு.மோகனிடம் உங்கள் சார்பாக அளிக்கிறேன்” என்றார்.
திரு.மோகன் மேடைக்கு வந்து காசோலையை பெற்றுக்கொண்டு அனைவருக்கும் நன்றி கூறினபிறகு எல்லோரும் கலைந்து சென்றனர்.
அனைவரின் கார்களும் சென்றபின் கடைசியாக திரு. மோகன், கலாதாரிடம் கை குலுக்கி விட்டு, “நீங்கள், மிக நல்லவர், மிக நல்ல ஒரு செயலை இன்று செய்து இருக்கின்றீர்கள், மிக்க நன்றி” என்றார்.
“மோகன், இது நாம் இருக்கும் சமுதாயத்திற்கு, நாம் எல்லோரும் செய்ய வேண்டிய கடமை, அதனால் இதை பெரிதாக்காதீர்கள். அந்த பிச்சைக்காரகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைத்தால் அதுவே போதும். நீங்கள் எப்படி போகப்போகிறீர்கள், நான் உங்களை என் காரில் ட்ராப் செய்யட்டுமா?”
“வேண்டாம், நான் வழக்கம் போல் பஸ்சில் போயிடுவேன்”.
மோகன் கல்லுரியை விட்டு வெளியில் வந்து சிறிது தூரம் நடந்து அங்கிருந்த ஒரு காரில் பின் கதவைத்திறந்து ஏறிக்கொண்டார். அதன் ட்ரைவர் திரும்பிகூடப் பார்க்காமல், “ஐயா, போன காரியம் என்னங்க ஆச்சு?” என்றான்.
“எல்லாம் நல்ல படியா முடிஞ்சது, நம்ம எஸ்.ஐ. செல்லதுரைக்கு ஃபோன் போட்டு அந்த பிச்சைக்காரங்களை நாளைக்கு ஒரு லாரியில கூட்டி கிட்டு போய், ஊருக்கு 20 கி.மீ. தள்ளி இறக்கி விட்டுட சொல்லு.” என்றார்.
அப்போது அவருடைய செல் ·போன் ஒலித்தது. அதை எடுத்து அவர்,
“சொல்லு!” “ம், ம், அப்படியா!, வெரிகுட்”, என்றார்.
பிறகு ட்ரைவரைப் பார்த்து, “எஸ்.ஐ. க்கு ·போன் செய்து விட்டாயா?”
“இன்னும் இல்லை, இப்பவே பண்ணட்டுமா, இல்ல ஆபிஸ் போய் பண்ணட்டுமா?”
“இப்பவே பண்ணிடு, செல் ஃபோன்ல இருந்து பண்ணாதே, அந்த பி.சி.ஓ. -ல இருந்து செய், அந்த பிச்சைக்காரங்களை ஊருக்கு வெளியில கொண்டு போய் விடச்சொல்லாதே, அவங்களை போன மாசம் திறந்தாங்களே அந்த 5-ஸ்டார் ஓட்டல் பக்கத்தில விடச்சொல்லு, அப்படியே அவருடைய கவர் ரெடி, இன்னிக்கு ஈவினிங் அவர் வீட்டுக்கு வந்துடும்- னு சொல்லிடு”
ட்ரைவர் ஃபோன் செய்யப் போனபோது மனதில் குத்து மதிப்பாக ஒரு 20 லட்சம் அந்த 5-ஸ்டார் ஓட்டலில் இருந்து கறந்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டார். அதை நினைக்கும் போதே அவர் முகத்தில் சந்தோஷம் தாண்டவமாடியது.
-முரளி

55 வார்த்தையில் 2வது சிறுகதை

வரன்
"என்னது!, நம்ம ராஜி, அந்த ரகுவைக் காதலிக்கறாளா!"

"கத்தாதீங்க, யோசிச்சு நல்ல முடிவா எடுக்கலாம்."

"என்னடி நல்ல முடிவு, தூ... அவனா எனக்கு மாப்பிள்ளை?".

அப்பா முன் தினம் பெண் பார்க்க வந்தவர்கள் வீட்டிற்கு ·போன் போட்டு ,"நமஸ்காரம், எங்க வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப சந்தோஷம். ஒரு நல்ல நாள்ல நிச்சயதார்த்தம் வெச்சுக்கலாம்" என்றார்.

"அம்மா என்னைப் பத்தி ஏன் தப்பா சொன்னே?"

"சும்மாயிரு ராஜி, இல்லைனா, இது அப்பா சாக்கு சொல்லி நிறுத்தற 10-வது வரனாயிடும்".

- முரளி

55 வார்த்தையில் முதல் சிறுகதை

'விபத்து'
நல்ல பிஸியான அந்த சாலையில் ஒரு தண்ணீர் லாரி வேகமாக வந்த போது ஒரு குழந்தை திடீரென சாலையை கடந்தது.
பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் "ஐயோ!" என்று அலறினர்.
அதை ஸ்ரீராம் மட்டும் சலனமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
சரியான சமயத்தில் ஒருவன் குழந்தையை காப்பாற்றி விட, அருகில் இருந்த எல்லோரும் உரக்க கை தட்டி பாராட்டும் போது ஸ்ரீராம் தன் மனைவியிடம் சொன்னான்,
"இதே மசாலா ஸீன் இன்னும் எத்தனை தமிழ் படத்தில் வருமோ தெரியலை?"
- முரளி