Saturday, May 17, 2008

தடயம் அத்தியாயம் - 10

"டாமிட், சொல்லுங்க அருள். மாட்டிகிட்டு இருக்கிறது உங்க மகள் மட்டும் இல்லை, என் அக்கா மகன் தேவராஜும்தான். ரெண்டு பேரையும் கடத்தியிருக்கிறது ஒரே கும்பல்தான். நீங்க தயங்கர ஒவ்வொரு நிமிஷமும் அவங்க உயிருக்கு ஆபத்து. So, சீக்கிரம் சொல்லுங்க" என்று இறைந்தார் சந்தானம்.

"சரி, இனிமே மூடி மறைச்சு ஒன்னும் ஆகப் போகரதில்லை, நடக்கரது நடக்கட்டும். அவங்க டிமாண்ட் என்னன்னா, நீங்களும் நானும் தனியா அவங்க சொல்ற ஒரு இடத்துக்கு வரனும். வரும்போது, கூட செல்வமோ அல்லது வேற யாராவதோ வந்தா என் மகளை உயிரோட பார்க்க முடியாது. கைல துப்பாக்கியோ அல்லது வேறு ஏதாவது ஆயுதமோ கொண்டு வரக்கூடாது. அப்படி கொண்டு வந்தா நாமளே உயிரோட அவங்க சொல்ற இடத்தில இருந்து திரும்பி வர முடியாது. அவங்க தேவராஜப் பத்தி ஒன்னும் சொல்லலை, அதனால அவங்ககிட்ட தான் தேவராஜ் இருக்காரான்னு தெரியலை. இருக்கலாம், ஆனா கன்பர்ம்ட்டா சொல்ல முடியாது. செல்வம் கண்டிப்பா நம்ம கூட வரமுடியாது என்ன பண்றது சொல்லுங்க?"

"அருள், செல்வத்தைப் பத்தி நீங்க கவலைப் படாதீங்க, அவர் நம்ம கூட வரமாட்டார், ஆனா அவர் நம்மள யாருக்கும் தெரியாம பின் தொடர்ந்து வருவார், தேவையான டைம்ல கரெக்ட்டா உள்ள பூந்து அந்த ஆளுங்களை பிடிப்பார். போதுமா"

"இருந்தாலும் ...." என்று இழுத்தார் அருள்மொழி.

"அருள்மொழி சார், சந்தானம் சார் சொன்னா மாதிரி, நான் யாருக்கும் தெரியாம உங்களை தொடர்ந்து வருவேன், சரியான சமையத்தில நானும், எங்க ஆளுங்களும், அவங்களைப் பிடிச்சிடுவோம்."

"சந்தானம் சார், நான் சி.டி.சி.ஐ.டி. ஆஃபீஸுக்கு போன் பண்ணி தகவல் சொல்றேன். எப்படியும் ஒரு 30-45 நிமிடத்தில நாம கிளம்பிடலாம்"

"குட். அந்த ஏற்பாட்டை நீங்க பாருங்க, நான் அவங்களைப் பிடிக்கரதுக்கு இன்னோரு ஐடியா வெச்சு இருக்கேன். என் பாண்ட் பட்டன்லயும், என் ஷர்ட் காலர் பட்டன்லயும் வையர்லெஸ் மைக்ரோ போன்ஸ் வெச்சிடுங்க. ரிசப்ஷன் எப்படி இருக்குன்னு கொஞ்சம் டெஸ்ட் பண்ணிடுங்க. ரிசப்ஷன் பார்ட்டிகளை ஒரு வேன்ல எங்க காரை தொடர்ந்து வரச் சொல்லுங்க. யாருக்கும் சந்தேகம் வராத மாதிரி ஒரு டப்பா வேனை யூஸ் பண்ணுங்க. நமக்குள்ள ஒரு கோட் வேர்ட் வெச்சுக்கலாம். ம்... எனக்கு பசிக்குது சாப்பிட ஏதாவது கிடைக்குமான்னு நான் அவங்களை கேட்டா அதுதான் உங்களுக்கு சிக்னல், ஓகே, உடனே உள்ள வந்திடுங்க. குறைந்த பட்சம் 15-20 ஆளுங்கள கூட்டிகிட்டு வாங்க"

"ஓகே சார்" என்றபடி செல்வம் செல்போனில் சி.டி.சி.ஐ.டி. ஆஃபீஸுக்கு தொடர்பு கொண்டு பேச ஆரம்பித்தார்.

அவர் பேசும் போது சந்தானமும் அருளும் அவரையே பார்த்தபடி இருந்தனர். செல்வம்
போனில் பேசி முடித்து விட்டு அவர்கள் பக்கம் திரும்பியதும், சந்தானம் அருளைப் பார்த்து
பேசத் துவங்கினார். "அருள், எத்தனை மணிக்கு, எங்க வரனும்னு அவங்க சொன்னாங்களா?"

"ராத்திரி 8 மணிக்கு, அடையார் பார்க் ஷெரட்டான் ஹோட்டலுக்கு பின் புறம் இருக்கிற சந்துல ஒரு ஆட்டோ நிக்கும் அதோட ட்ரைவர்கிட்ட ஒரு 500 ரூபாய் கொடுத்து அதுக்கு எவ்வளவு தூரம் போகலாமோ அங்க போகனும்னு சொன்னா அவன் நம்மள இந்த கும்பல் இருக்கர இடத்துல கொண்டு போய் விட்டுடுவான்."

"அருள், ராத்திரி 8 மணிக்கு அந்த ஹோட்டல் சந்துல 10-15 ஆட்டோ நிக்கும் அதுல இந்தக் கும்பல சேர்ந்த ஆட்டோ எதுன்னு எப்படி கண்டு பிடிக்கரது"

"சந்தானம் அவங்க ஆட்டோ நம்பர் சொல்லியிருக்காங்க. அது TN - 09 - 7916"

"செல்வம், அந்த ஆட்டோவை ட்ரேஸ் பண்ணி அது யாரோடது, என்ன அட்ரெஸ், எல்லா டீடெயில்ஸும் சேகரியுங்க.

"யெஸ் சார்"

செல்வம் சி.டி.சி.ஐ.டி. ஆஃபீஸுக்கு மறுபடி தொடர்பு கொண்டு பேச ஆரம்பித்தார், அப்போது ஆட்டோ நம்பரையும் தந்தார். பிறகு அவர்களிடம் சற்று நேரம் பேசிவிட்டு சந்தானம் பக்கம் திரும்பினார்.

அதை குறிப்பால் உணர்ந்த சந்தானம் "அருள் நீங்க ரெடியாகுங்க, நான் செல்வத்துக்கிட்ட பேசிட்டு வந்ததும் நாம கிளம்பலாம்"

"செல்வம், வாங்க நாம வாசலுக்கு போய் பேசலாம்"

"செல்வம், இது ஒரு பயங்கரமான கும்பல் மாதிரி தெரியுது, நீங்க கொஞ்சம் ஜாக்ரதையா இந்த விஷயத்தை ஹாண்டில் பண்ணனும். அவங்க கிட்ட மாட்டிகிட்டு இருக்கரது அருளோட மகள் மட்டும் இல்லை நம்ம தேவராஜும்தான். நான் அருளை கூட்டிகிட்டு அவங்க சொன்ன மாதிரி அந்த ஆட்டோவை பிடிச்சு அவங்க இடத்துக்கு போறேன், நீங்க அந்த ஆட்டோவை தொடர்ந்து வாங்க. நான் அவங்க இடத்துக்கு போனதும் அவங்க என்னை கண்டிப்பா ஏதாவது மைக்ரோஃபோன் இருக்கான்னும், ஆயுதம் இருக்கான்னும் பார்ப்பாங்க, அதனால ஆயுதம் இல்லாமதான் நான் போகப் போறேன். மைக்ரோஃபோன் இல்லாம போகமுடியாது, அந்த ரிஸ்க் நான் எடுத்துதான் ஆகனும். வேற என்ன பண்ணலாம்னு ஏதாவது தோணுதா?"

"சார், ப்ளான் இதுவரைக்கும் சரியாதான் இருக்கு, ஆனா...."

"என்ன இழுக்கரீங்க சொலுங்க"

"ராத்திரி நேரத்தில ஒரு ஆட்டோவை பின் தொடர்ந்து வரது ரொம்ப கஷ்டம், அதனால்..."

"அதனால என்ன? சொல்லுங்க"

"நான் ரெண்டு கான்ஸ்டபிள்ஸ தனித்தனியா ரெண்டு பைக்ல ஆட்டோவை தொடர்ந்து போகச் சொல்றேன், நானும் ரெண்டு டீம் ஆளுங்களும் ஒரு நாலு கார்ல அந்த ஆட்டோவை தொடர்ந்து வருவோம். ஒரு வேளை நாங்க மிஸ் பண்ணினாலும், பைக்ல வரவங்க மிஸ் பண்ண மாட்டாங்க. அவங்க எங்களுக்கு ஆட்டோ போகிற இடத்தை சொல்லிடுவாங்க. நாங்க உங்க சிக்னலுக்கு வெயிட் பண்ணுவோம், சிக்னல் கிடைக்கரதுக்குள்ள உள்ள நுழையரதுக்கு ஏதாவது சான்ஸ் கிடைச்சுதுன்னா அதை பயன் படுத்திப்போம்"

"குட், எப்ப வயர்லெஸ் மைக் வருது"

"என் டீம் ஆளுங்க இங்க எடுத்துட்டு வர்ராங்க, இன்னும் ஒரு 10-15 நிமிஷத்தில கிடைச்சிடும். வந்ததும் செட் பண்ணி டெஸ்ட் பண்ணிடலாம்."

"ஓகே, நான் உள்ள போய் அருளை தயார் பண்றேன், நீங்க மைக் கிடைச்சதும் சொல்லுங்க"

சந்தானம் உள்ளே போனதும், செல்வம், செல்போனில் டீம் எங்கிருக்கிறது என்பதையும், மற்ற விஷயங்களையும் உறுதி செய்து கொண்டார். பிறகு அவ்ர் துரைக்கு போன் செய்து அனைத்து விஷயத்தையும் சொல்லி அவரோடு சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தார், அப்போது ஒரு ஜீப் வரவும் துரையிடம் சொல்லிவிட்டு அந்த ஜீப்பை நோக்கி ஓடினார்.

அவர் ஓடி வருவதை பார்த்த ஜீப்பிலிருந்தவர்கள் சற்று திகைப்படைந்தாலும், சுதாரித்துக் கொண்டு ஜீப்பின் ட்ரைவர் சீட்டிலிருந்து ஒருவர் சற்று விரைப்பாக நின்றார்.

அவரை கிட்டத்தில் பார்த்ததும் செல்வம் சற்று அதிர்ந்து போனார்.

"இது என்ன கனவா இல்லை நிஜமா? நீங்க எப்படி இங்க!" என்று இழுத்தார்.

(தொடரும்)

No comments: