Friday, November 11, 2011

தடயம் - அத்தியாயம் - 13


இதுவரை வந்த நாவலை படிக்க:

தடயம் அத்தியாயம்-1

தடயம் - அத்தியாயம் - 2

தடயம் - அத்தியாயம் - 3

தடயம் - அத்தியாயம் - 4

தடயம் - அத்தியாயம் - 5

தடயம் - அத்தியாயம் - 6

தடயம் - அத்தியாயம் - 7

தடயம் - அத்தியாயம் - 8

தடயம் - அத்தியாயம் - 9

தடயம் அத்தியாயம் - 10

தடயம் - அத்தியாயம் - 11

தடயம் - அத்தியாயம் - 12





ஆட்டோ கிளம்பிய அடுத்த நிமிடம், ஒரு மோட்டார் சைக்கிள் கிளம்பி ஆட்டோவைத் தொடர்ந்து செல்ல ஆரம்பித்தது.  அந்த மோட்டார் சைக்கிளைத் தொடர்ந்து ஒரு 20-30 அடி தூரத்தில் ஒரு மோட்டார் சைக்கிளும், ஒரு பழைய டெம்போ ட்ராவலர் வேனும் பின் தொடர்ந்தது.  மெதுவாக செல்ல ஆரம்பித்த ஆட்டோ, சட்டென்று வேகம் எடுத்து, மாம்பலம் பக்கம் நுழைந்து, ஜன சந்தடியில் மறைந்தது.  ஆட்டோவின் வேகத்தை பார்த்து சந்தானத்தின் மனதிலும் பயம் சற்று எட்டிப் பார்க்க ஆரம்பித்தது.


சந்தானம் இது வரை எதற்கும் பயந்தது கிடையாது.  எப்படிப் பட்ட சமயத்திலும் தனது தைர்யத்தை அவர் இழந்தது கிடையாது.  பயம்ன்னா என்னன்னு தெரியாத இவருக்கு இப்போது இருக்கிற நிலைமை பயமா? இல்லை காலைல இருந்து சாப்பிடாம வேலை செய்யரதால வயிறு செய்யர உபாதையான்னு தெளிவில்லாம இருந்தது.  சற்றுத் திரும்பி அருளைப் பார்த்தார், அருள், கண்களை மூடி, கோளரு பதிகம் சற்று முணுமுணுத்த குரலில் சொல்லிக் கொண்டிருந்தார்.  அருள் இப்படி ஒரு ப்ரச்சனையை அவர் சந்தித்ததில்லை அதனால் சற்று ஆடிப் போயிருந்தார்.  எப்படியாவது இந்த சிக்கலில் இருந்து விடுபட்டு க்ருத்திகாவை வீட்டுக்கு கூட்டி வந்துவிட்டால் போதும் என்று இருந்தது அவருக்கு.  


சந்தானம் ஆட்டோவின் சீட்டில் சற்று சாய்ந்து உட்கார்ந்து கொண்டு கோர்வையாக விஷயங்களை ஆராய ஆரம்பித்தார்.  முதலில் காலையில் தனக்கு வந்த டெலிஃபோன் காலில் ஆரம்பித்து அருளின் வீட்டிலிருந்து கிளம்பும் முன் வந்த கால் வரை எல்லா விவரங்களையும் மனதில் ஓட்டிப் பார்த்தபடி வந்தார்.  சுமார் 20 நிமிடங்கள் சென்ற ஆட்டோ அடையார் மேம்பாலத்தை தாண்டி சற்று திரும்பி கலாக்‌ஷேத்ரா பக்கம் சென்று ஒரு சின்ன ஷாப்பிங் காம்ப்ளெக்ஸுக்குள் நுழைந்தது. 


சந்தானத்திற்கு இது பெரிய ஆச்சர்யமாக இருந்தது.  "ஜன நடமாட்டம் அதிகம் இருக்கர இந்த சமயத்தில இங்க ஏன் வந்தான் இவன்" என்று யோசிக்க ஆரம்பிக்கும் போதே, ஆட்டோவின் இடப்பக்கம் ஒரு மாருதி ஆம்னி வேன் வந்தது.  அதைப் பார்த்ததும் ஆட்டோக்காரன் சடன் ப்ரேக் போட்டு வண்டியை நிறுத்தினான்.  அருளும், சந்தானமும் படக்கென்று முன்னால் இருந்த இரும்பு கம்பியில் தலையை இடித்துக் கொண்டனர்.  இதை சந்தானம் சற்று எதிர்பார்த்திருந்ததால் சட்டென்று சுதாரித்துக் கொண்டு விட்டார்.  அருள் இதைச் சற்றும் எதிர்ப்பார்க்காததால், இன்னும் அதிகமாகக் கலங்கி விட்டார். ஆட்டோக்காரன் சற்றுத் திரும்பி "ரெண்டு பேரும் கப்புன்னு அந்த வேன்ல போய் உக்காருங்க" ன்னு கத்தவும், இது இன்னொரு ப்ளான் சேஞ்சுன்னு சந்தானத்துக்குத் தெரிந்தது. 


ஆட்டோவிலிருந்து இறங்கும் போது தடுமாறி விழுவது மாதிரி விழ இது வரை கத்திக் கொண்டிருந்த ஆட்டோக்காரன், "சார் பாத்து சார், எங்கனா அடிகிடி பட்டுடுச்சா பாரு" என்றான்.


"ஒன்னும் அடிபடல, காலு மரத்துப் போன மாதிரி இருக்கு அவ்வளவுதான்" என்றவர் அடுத்த வண்டியில் ஏறுவதை கொஞ்சம் டிலே பண்ணி போலீஸ் தொடர்ந்து வர்ராங்கலான்னு பார்த்தார்.  பாழாப் போன இருட்டில் ஒரு மண்ணும் தெரியலை அதுக்குள்ள அருள் மெதுவாக ஆட்டோவில இருந்து இறங்கி வேனுக்குள் போக ஆரம்பித்தார்.  சந்தானத்துக்கு அருளைப் பார்க்கும் போது பாவமாகத்தான் இருந்தது..  போலீஸ் வேனோ அல்லது அதுமாதிரி யாரும் கண்ணில் படாததால் சந்தானமும் மெதுவாக வேனில் ஏற ஆரம்பித்தார்.  அப்போது எதேச்சையாக இடது பக்கம் பார்த்த அவர் கண்ணில் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் நுழைவு வாயில் பக்கம் இருந்த ஒரு பைக்காரன் ஹெல்மெட்டைக் கழட்டவும் அது செல்வம் போல இருந்தது.  மனதில் இவருக்கு இப்போது ஆயிரம் யானை பலம் வந்தது மாதிரி இருந்தது. 


வேனின் உள்ளிருந்து எதுவும் தெரிய முடியாத மாதிரி எல்லா கண்ணாடியும் பேப்பர் வைத்து மூடியிருந்தது.  முன்பக்கம் டிரைவர் கூட தெரியாத படி ஒரு தடுப்பு வைத்து மறைக்கப் பட்டிருந்தது.  இந்த கும்பல் எல்லாவற்றையும் மிக மிக சரியாகத் திட்டமிட்டிருக்கிறார்கள் என்பது சந்தானத்துக்கு தெரிந்தது.  வெளியே என்ன நடக்குதுன்னு தெரியாததால், இவருக்கு செல்வம் தொடர்ந்து வர்ராரா இல்லையான்னு தெரியவும் இல்லை. 


வேன் மெதுவாகவே போய்க்கொண்டிருந்தது. இந்த 30 நிமிட வேன் பயணத்திலும் யோசிப்பதை சந்தானம் நிறுத்தவே இல்லை.  அதைத் தாண்டி அடுத்து என்ன நடக்கப் போகுது என்ற ஒரு துடிப்பு சந்தானத்துக்கு வர ஆரம்பித்தது.  ஏதாவது பண்றதா இருந்தா ஆட்டோவிலேயோ அல்லது வேன்லேயோ இவங்க செஞ்சிருக்க முடியும் அப்படி எதுவும் செய்யாததுனால இவங்க நோக்கம் வேர என்னவா இருக்க முடியும்ன்னு யோசித்த படியே இருந்தவர் வேன் மெதுவாக சின்ன சின்ன சந்துகளில் திரும்ப ஆரம்பிப்பதை வைத்து இது சென்னையின் ஏதோ ஒரு புறநகர் ஏரியா என்று யூகித்தார்.  இப்படி ஒரு 10 நிமிட கழிந்த பிறகு வேன் ஒரு கொடோவுனுக்குள் நுழைந்து உள்ளே சென்றது.  ஒரு சில விநாடிக்குப் பின் "சட சட" ன்னு வந்த சப்தத்தை வைத்து ஒரு கடையின் ஷட்டர் சப்தம் என்று தெரிந்து கொண்டார்.  


வேனின் கதவுப் பக்கம் ஒரு சின்ன தட்டல் சப்தம் கேட்டது, அதை அடுத்து மெதுவாக அந்த கதவு திறக்கப்பட, ஒரு கொடோவுனின் உள்ளே வேன் வந்திருப்பது தெரிந்தது.  கொடோவுன் மிக சுத்தமாக இருந்தது.  ட்யூப் லைட் வெளிச்சத்தில் சந்தானத்துக்கு கண் கூச ஆரம்பித்தது.  அருள் பயத்தில் எதுவும் பேசத் தோன்றாமல் மருங்க மருங்க விழித்தபடி வேனிலிருந்து இறங்கினார். 


கொடோவுனின் நடுவில் இரண்டு நாற்காலிகளில் இருவர் கட்டிப் போட்டபடி இருந்தனர்.  அதில் இருந்த ஒருவர் பெண் என்பது அணிந்திருந்த சூடிதாரில் இருந்து தெரிந்தது.   


அது க்ருத்திகாவா என்பது இவர்கள் இருந்த இடத்திலிருந்து தெளிவாகத் தெரியாதபோதே அருள் பரபரப்பாக "க்ருதி க்ருதி" என்று கத்தியபடி அவர்களை பார்த்து ஓடத் துவங்கினார்.  


அப்போது, வேனின் பக்கத்திலிருந்து இருவர் பட்டென்று வந்து அருளை ஓட முடியாமல் பிடித்துக் கொண்டனர். 


அப்போது, "அவரை விடுங்க அவர் போய் அவரோட செல்ல பெண்ணை பார்க்கட்டும்." என்று கொடவுனின் பக்கவாட்டிலிருந்து ஒரு குரல் கேட்டது.  அந்தக் குரலைக் கேட்ட சந்தானம் அதிர்ச்சியில் உறைந்தார்.

(தொடரும்)

No comments: